பிளாஷ்பேக் : தலைப்பிற்கு சம்பந்தமில்லாத படம்
பொதுவாக தற்போது வெளியாகும் பெரும்பாலான புதிய படங்களில் தலைப்பிற்கும், கதைக்கும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் அபூர்வமான ஒரு சில படங்கள்தான் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் வரும். அதனால் தோல்வி அடைந்த படங்களும் உண்டு. அதற்கு ஆகச் சிறந்த உதாரணமான படம் 'ஆடிப்பெருக்கு'. 1962 ஆம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்திருந்தனர்.,
படத்தின் டைட்டில் கார்டின்போது வரும் 'அன்னையின் அருளே வா, ஆடிப்பெருக்கே வா வா” என்ற வரிகளைத் தவிர படத்திற்கும், அதற்கும் சம்பந்தமில்லை. கடைசி இரண்டு வரியை ஜெமினி கணேசன் பாடுவார் அவ்வளவுதான்.
கதையை மக்களன்பன் எழுத, 'ஜாவர்ட்' என். சீதாராமன் திரைக்கதை மற்றும் வசனம் எழுத, ஏ.எம். ராஜா இசையமைக்க, கே. சங்கர் இப்படத்தை இயக்கித் தொகுத்திருந்தார். 'ஆடிப்பெருக்கு' என்பது தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் நீருக்கு நன்றி செலுத்தும் விழா அந்த விழா பற்றிய கதை என்று நம்பி ஏமாந்த ரசிகர்களால் படம் படுதோல்வி அடைந்தது.