உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஆயிரம் மலர்களே மலருங்கள்...' பாடல் நினைவிருக்கிறதா : ‛நிறம் மாறாத பூக்களுக்கு' வயது 47

‛ஆயிரம் மலர்களே மலருங்கள்...' பாடல் நினைவிருக்கிறதா : ‛நிறம் மாறாத பூக்களுக்கு' வயது 47

இளையராஜா இசையில், கண்ணதாசன் வரிகளில், மலேசியா வாசுதேவன், ஜென்சி, எஸ்.பி.பி.சைலஜா குரலில் உருவான ஆயிரம் மலர்களே பாடல்களை ஒலிபரப்பாத வானொலிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அந்த பாடல் பிரபலம். இன்றும் பல இரவுகளில் அந்த பாடல் எங்கேயோ கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த பாடலுக்கு வயது 47. ஆம், பாரதிராஜா இயக்கத்தில் விஜயன், ரதி, சுதாகர், ராதிகா நடித்த நிறம் மாறாத பூக்கள் படத்தில் பாடல் இடம் பெற்று இருந்தது. 1979ம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் இந்த படம் வெளியானது.

இரண்டு காதல்களை புது கோணத்தில் சொன்ன படம் நிறம்மாறாத பூக்கள். பாக்யராஜ் கதையில் உருவான படம். பணக்கார பெண்ணான ராதிகா, ஏழையான சுதாகரை காதலிப்பார். அவர் தந்தை காதலை பிரித்து, ராதிகாவை ஊட்டிக்கு அனுப்புவார். அங்கே தொழிலதிபராக இருக்கும் விஜயனுக்கும், ராதிகாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க, சுதாகரை சந்திப்பார் ராதிகா. விஜயன் காதலியான ரதி ஒரு ஏரியில் உயிர் விட்டு இருப்பார். கடைசியில் என்ன நடக்கிறது என்பதை தனக்கே உரிய பாணியில் அழகாக சொல்லியிருந்தார் பாரதிராஜா.

இளையராஜாவின் பாடல்கள், நிவாஸ் ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு படத்துக்கு பிளஸ் பாயின்ட் ஆக அமைந்தன. இந்தபடத்தில் சுதாகர், ராதிகா, விஜயன், ரதி கேரக்டர்களுக்கு அவர்களின் சொந்த பெயரையே வைத்து புதுமை செய்தார் பாரதிராஜா. ஆயிரம் மலர்களே தவிர, எஸ்பிபி பாடிய 'முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே...' என்ற பாடலும் ஹிட்டாகின. இந்த பாடல்தான், பாரதிராஜா படத்தில் எஸ்பிபி பாடிய முதல் பாடல்.

கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹோம்லியாக அறிமுகமான ராதிகா இதில் பணக்கார பெண்ணாக வருவார். சுதாகருக்கும் மாறுபட்ட வேடம். குறிப்பாக, விஜயன், ரதி காதல், அந்த டேப்ரிக்கார்டர் சீன், விஜயன் ஏரி கிளைமாக்ஸ் பெரிதும் பேசப்பட்டன. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் தொடங்கி, பாரதிராஜா இயக்கிய இந்த படமும் ஹிட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-09-01 20:50:46

ஜென்சி பாடின இரு பறவைகள் மலை முழுவதும் பாட்டை சொல்லாமல் விட்டு விடீர்களே .. என்ன பாடல்கள் மறக்க முடியுமா