5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்
5 திருமணம்... 49 பெண்களுடன் காதல்; பலே ஆசாமியை பிடிக்க போலீசார் நடத்திய திருமண நாடகம்
UPDATED : ஆக 04, 2024 09:32 AM
ADDED : ஆக 04, 2024 09:20 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில் பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம், கார் உள்ளிட்டவற்றை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த பலே ஆசாமியை போலீசார் ஸ்கெட்ச் போட்டு கைது செய்தனர்.
திருமண நாடகம்
ஒடிசாவைச் சேர்ந்த சத்யஜித் மனகோவிந்த் சமால்,34, என்பவர் மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார்.
இதுவரையில் 5 பெண்களை திருமணம் செய்தும், 49 பெண்களை காதலித்து ஏமாற்றியும், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை சுருட்டி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர், தங்களை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.45 லட்சம் வரையில் மோசடி செய்து விட்டதாக போலீஸில் புகார் அளித்தனர்.
போலீஸார் ஸ்கெட்ச்
அதன்பேரில், பெண்களை ஏமாற்றி மன்மதனாக வலம் வந்த சமாலை கைது செய்ய புவனேஸ்வர் போலீசார் ஒரு திட்டம் போட்டனர். பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு மணமகன் தேவைப்படுவதாக மேட்ரிமோனி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்தனர்.
துபாய் கனவு
இதனைப் பார்த்த சலாம், அவரை திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாகக் கூறி அணுகியுள்ளார். அப்போது, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், பெண் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு, துபாயிக்கு சென்று செட்டில் ஆகி விட இருந்ததாக சலாம் கூறியுள்ளார்.
ரொக்கம் பறிமுதல்
இது குறித்து புவனேஸ்வர் போலீஸ் கூறியதாவது: மேட்ரிமோனி இணையதளத்தில், 2வது திருமணத்திற்காக வரன் தேடும் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து சமால் தனது சதித்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார்.
அவர்களை பேச்சால் மயக்கி, பணம் மற்றும் கார், பைக் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களைப் பெற்று ஏமாற்றியுள்ளார். கைது செய்யப்பட்ட போது, சமாலிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம்,' எனக் கூறப்பட்டுள்ளது.