பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா ஏற்பு
பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா ஏற்பு
ADDED : ஜூன் 03, 2024 11:33 PM

சிம்லா: ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்த மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை, ஹிமாச்சல பிரதேச சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா ஏற்றுக் கொண்டார்.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஒரேயொரு ராஜ்யசபா தொகுதிக்கு, கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது.
அதிருப்தி
இதில், பா.ஜ., சார்பில் ஹர்ஷன் மஹாஜன், காங்., சார்பில் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ஆகியோர் போட்டியிட்டனர்.
ஹிமாச்சல் சட்டசபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், எளிதாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், அக்கட்சியின் ஆறு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஹர்ஷன் மஹாஜனுக்கு ஓட்டளித்தனர். இதேபோல், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளித்தனர்.
இதனால், ஹர்ஷன் மஹாஜன் வெற்றி பெற்றார். இந்த விவகாரம், மாநில அரசியலில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியது. இதைஅடுத்து, கட்சி மாறி ஓட்டளித்த காங்கிரசின் ஆறு அதிருப்தி எம்.எல்.ஏ.,க் களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா உத்தரவிட்டார்.
இந்த ஆறு தொகுதிகளுக்கும் கடந்த 1ல் இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள், லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகின்றன.
ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்த சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களான டேஹ்ரா தொகுதியின் ஹோஷியார் சிங், ஹமிர்பூர் தொகுதியின் ஆஷிஷ் ஷர்மா, நாலாகர் தொகுதியின் கே.எல்.தாக்குர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக மார்ச் 22ல் அறிவித்தனர். எனினும் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா ஏற்கவில்லை. தொடர்ந்து, மார்ச் 23ல் அவர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.
மனு தாக்கல்
இதையடுத்து, தங்களது ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் மூன்று பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில், இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக, சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.