ADDED : ஜூலை 22, 2024 06:40 AM
மாண்டியா: காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் 27ல் முதல்வர் சித்தராமையா, கே.ஆர்.எஸ்., அணைக்கு சமர்ப்பண பூஜை செய்ய உள்ளார்.
ஸ்ரீரங்கபட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பன்டி சித்தேகவுடா நேற்று அளித்த பேட்டி:
காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், நல்ல மழை பெய்கிறது. மாண்டியாவின், ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை நிரம்ப, 2 டி.எம்.சி., தண்ணீர் தேவை. மழை நீடிப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும்.
கே.ஆர்.எஸ்., அணை நிரம்புவது, பண்டிகை போன்றதாகும். வரும் 27ல் கே.ஆர்.எஸ்., அணைக்கு, முதல்வர் சித்தராமையா சமர்ப்பண பூஜை செய்கிறார். துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், மாண்டியா, மைசூரு பகுதிகளின் அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பர்.
அணையில் இருந்து உபரி நீர், வெளியேற்றப்படுகிறது. பெருமளவில் தண்ணீர் திறப்பதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆற்றங்கரையில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டும்.
கால்நடைகளை ஆற்றங்கரையில் மேய விடக்கூடாது. முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.