மோடியின் 'நிடி ஆயோக்' கூட்டம் 'இண்டியா' முதல்வர்கள் புறக்கணிப்பு
மோடியின் 'நிடி ஆயோக்' கூட்டம் 'இண்டியா' முதல்வர்கள் புறக்கணிப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:38 AM
புதுடில்லி,டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் உட்பட, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர்.
பார்லிமென்டில் நடப்பு 2024 - 25ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில், தமிழகம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக, 'இண்டியா' கூட்டணியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டில்லியில் வரும் 27ல், பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களும் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, காங்., ஆளும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர், நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துஉள்ளனர்.
இதே போல், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரும் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், நிடி ஆயோக் கூட்டத்தில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார்.
அப்போது, பட்ஜெட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து, பிரதமர் மோடியிடம் அவர் நேரடியாக கேள்வி எழுப்புவார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.