ADDED : ஜூலை 14, 2024 11:55 PM

சண்டிகர்: பஞ்சாபின் பாசில்கா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று புத்தகப் பை இன்றி மாணவர்கள் வரும் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
இது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இங்குள்ள பாசில்கா மாவட்டத்தில், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கி கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பப் பள்ளிகளில் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று புத்தகப் பை இன்றி மாணவர்கள் வரும் நடைமுறையை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
அன்றைய தினம், வழக்கமான வகுப்புகளுக்கு பதிலாக, மாணவர்களின் சிந்தனையை துாண்டக்கூடிய கதைச் சொல்லல், குழு மனப்பான்மையை வளர்க்கும் வகையில் விளையாட்டுப் பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி சிவ் பால் கூறுகையில், “பசில்கா மாவட்டத்தில் உள்ள 468 ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் 72,000 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புத்தகப் பை இன்றி பள்ளிக்கு வரும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளோம்.
''மாணவ, மாணவியரின் தனித் திறன்களை கண்டறிந்து, அவற்றை ஊக்கப்படுத்தும் செயல்கள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.