'மூடா' முறைகேடு விவாதிக்க அனுமதி மறுப்பு; சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆவேசம்
'மூடா' முறைகேடு விவாதிக்க அனுமதி மறுப்பு; சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆவேசம்
ADDED : ஜூலை 24, 2024 11:29 PM

பெங்களூரு : 'மூடா' சார்பில், முதல்வரின் மனைவிக்கு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக சட்டசபையில் பேசுவதற்கு அனுமதி மறுத்ததால், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., - ம.ஜ.த.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நேற்று காலை சட்டசபை கூடியதும், இந்த முறைகேடு குறித்து, ஒத்திவைப்பு தீர்மானம் அல்லது விதி எண்: 69ன் கீழ் விவாதம் நடத்த வாய்ப்பு தரும்படி, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
அப்போது நடந்த விவாதம்:
சபாநாயகர் காதர்: 'மூடா' விஷயம் தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடத்த வாய்ப்பு தர முடியாது. கேள்வி நேரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்: இந்த முறைகேட்டில், முதல்வருக்கு தொடர்பு இருப்பதால் விவாதிக்க வேண்டியது அவசியம். வாய்ப்பு தந்தே ஆக வேண்டும்.
அமைச்சர் பைரதி சுரேஷ்: எதிர்க்கட்சியினர் என்னென்ன முறைகேடுகள் செய்துள்ளனர் என்ற மொத்த விபரம் என்னிடம் உள்ளது.
பா.ஜ., அஸ்வத் நாராயணா: சரி, பகிரங்கப்படுத்துங்கள், விவாதம் நடத்துவோம். அனைத்து முறைகேடுகள் குறித்தும் பேசுவோம்.
அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல்: மூடா முறைகேடு தொடர்பாக, அரசு சார்பில் நீதி விசாரணைக்கு ஏற்கனவே குழு அமைத்துள்ளது. இதை அனைவரும் வரவேற்க வேண்டும். சட்டசபையில் பேசுவது, விசாரணையை பாதிக்கும். எனவே, சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு தர கூடாது.
(இந்த வேளையில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினரிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. யார் என்ன பேசுகின்றனர் என்பதே புரியவில்லை)
எதிர்க்கட்சி தலைவர்: கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, முறைகேடு குறித்து பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும். இல்லை என்றால் மூடி மறைத்து விடுவர்.
பா.ஜ., - பசனகவுடா பாட்டீல் எத்னால்: விவாதம் நடத்தினால் தான், பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., என யார் யார் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியும்.
பா.ஜ., - சுரேஷ்குமார்: சட்டசபையில் விவாதம் நடத்துவதை தடுப்பதற்காகவே, கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விவாதம் நடத்த வாய்ப்பு தர வேண்டும்.
ஹெச்.கே.பாட்டீல்: அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் வாய்ப்பு கேட்கின்றனர். விதிமுறைப்படி கேள்வி நேரத்தை ஆரம்பியுங்கள்.
சபாநாயகர்: எதிர்க்கட்சி தலைவர் கேட்டுள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்கிறேன்.
(இந்த வேளையில் எதிர்க்கட்சியினர் எழுந்து நின்று, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, 'ஒன்சைடு, ஒன்சைடு' என்று கோஷம் எழுப்பினர்.
பா.ஜ., சுனில் குமார்: எங்களை காக்க வேண்டிய சபாநாயகரே, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
(தொடர்ந்து கடும் அமளி நிலவியதால், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது)