பட்ஜெட் உரையில் ரயில்வே இல்லை ஆனால் நிதி அதிகரிப்பு
பட்ஜெட் உரையில் ரயில்வே இல்லை ஆனால் நிதி அதிகரிப்பு
UPDATED : ஜூலை 24, 2024 03:46 AM
ADDED : ஜூலை 24, 2024 01:34 AM

ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடப்பட்டு வந்த நிலையில், மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2016 -- 17ல் மத்திய நிதியமைச்சராக இருந்த போது அது நிறுத்தப்பட்டு, பொது பட்ஜெட்டில், உட்கட்டமைப்பு என்ற தலைப்பின் கீழ் ரயில்வே துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதில் ரயில்வே துறை குறித்து எதையும் குறிப்பிடவில்லை.
அதே சமயம் பட்ஜெட்டுக்கு முன்னதாக வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில், மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட இந்திய ரயில்வேயின் சாதனைகள் குறிப்பிடப்பட்டன.
மேலும், இந்தாண்டு ரயில்வேக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் பல்வேறு பிரிவுகளுக்கு நிதியானது கடந்த பட்ஜெட்டை விட அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் பாதை அமைக்க 34,603 கோடி ரூபாய், இரட்டை ரயில் பாதை அமைக்க 29,312 கோடி ரூபாய், சிக்னல் மற்றும் தகவல் தொடர்புக்கு 4,647 கோடி ரூபாய், மின் வழிப்பாதையாக மாற்ற 6,742 கோடி ரூபாய், பயணியர் வசதிக்கு 15,511 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1.08 லட்சம் கோடி ரூபாய் நிதியை வைத்து, 2024 -- 25ல் ரயில்வேயின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
ரயில் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் பெரும் பகுதி, 'கவச்' பாதுகாப்பு அமைப்பை நிறுவ செலவிடப்படும்.
ரயில்வேயில் முன்பதிவில்லாத பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 10,000 கூடுதல் பொதுப் பெட்டிகள் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.