அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவிப்பு
UPDATED : ஜூன் 09, 2024 04:13 PM
ADDED : ஜூன் 09, 2024 03:47 PM

புவனேஸ்வர்: எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். தற்போது, தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் 'வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்' என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மறுத்து விட்டார்.
பதவிக்காக வரவில்லை
இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். ஐ.ஏ.எஸ்., பதவியை துறந்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
மக்கள் சேவை
மூதாதையர்களின் சொத்துகள் தான் என் வசம் உள்ளன. நான் ஐ.ஏ.எஸ்., பணியில் சேரும் போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளன. மக்களுக்கு சேவையாற்றவே ஐ.ஏ.எஸ்., பணிக்கு வந்தேன். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.