120 நகரங்களுக்கு விமான சேவை 'உடான்' திட்டத்தால் பயன்
120 நகரங்களுக்கு விமான சேவை 'உடான்' திட்டத்தால் பயன்
ADDED : மார் 16, 2025 02:53 AM

புதுடில்லி: மாற்றியமைக்கப்பட்ட புதிய 'உடான்' திட்டத்தால், புதிதாக 120 நகரங்களுக்கு விமான சேவை கிடைக்கும் என, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
நாட்டில் உள்ள முக்கியமான சிறு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து வசதி வழங்குவதற்காக, 'உடான்' திட்டத்தை மத்திய பா.ஜ., அரசு அறிமுகப்படுத்தியது.
உடான் திட்டத்தின் கீழ், சிறிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மத்திய பட்ஜெட்டில் 2,357 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி, 88 விமான நிலையங்களில் இருந்து, 619 நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பகுதிகள் போன்றவற்றிலும் மிகச்சிறிய விமான நிலையங்கள், 13 ஹெலிபேட் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது; 22 விமான நிலையங்களை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட, 'உடான்' திட்டம் குறித்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று கூறுகையில், “இந்த புதிய திட்டமானது, உள்நாட்டு பயணியர் விமான போக்குவரத்தை மேம்படுத்தும். மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையிலான விமான போக்குவரத்து வாயிலாக விரைவான வளர்ச்சியை நாடு எட்டும்.
''அடுத்த 10 ஆண்டுகளில், 120 புதிய இடங்களை விமான போக்குவரத்து வாயிலாக இணைக்கவும், உள்நாட்டில் நான்கு கோடி பேர் விமானங்களை பயன்படுத்தவும் இந்த திட்டம் உதவும்,” என்றார்.