ADDED : ஜூலை 20, 2024 08:18 PM

பிரதமர்
மோடி ஒரு கொள்கை வைத்துள்ளார். அதாவது, மாநில கவர்னர்கள் எவரையும்
சந்திப்பதை தவிர்க்கிறார். 'எந்த பிரச்னையாக இருந்தாலும், உள்துறை அமைச்சர்
அமித் ஷாவை சந்தியுங்கள்' என, கவர்னர்களிடம் கூறிவிட்டார். முக்கியமான,
தலை போகிற பிரச்னை இருந்தால் மட்டுமே கவர்னர்களை பிரதமர் சந்திப்பார்.
'ஒரு
பக்கம், உத்தர பிரதேச பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னைகள்; இன்னொரு பக்கம்
மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் பா.ஜ., கூட்டணியில் பிரச்னைகள் என,
கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், மோடி நேரம்
ஒதுக்கி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்தது, மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது' என்கின்றனர், பா.ஜ.,வினர்.
டில்லிக்கு ஐந்து நாள் பயணமாக
வந்த கவர்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததுடன், பிரதமரையும்
சந்தித்தார்; இந்த சந்திப்பு, 20 நிமிடங்கள் நடைபெற்றதாம்.
தமிழக
அரசியல் நிலை, கள்ளச்சாராய மரணங்கள், அதன் பின்னணி, போதை பொருட்கள் தங்கு
தடையின்றி கிடைப்பது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்
உட்பட நடக்கும் அரசியல் கொலைகள், மோசமாகும் சட்டம் - ஒழுங்கு என, பல
விஷயங்களை பிரதமரிடம் விலாவாரியாக பகிர்ந்து கொண்டாராம் தமிழக கவர்னர்.
'அடுத்த
மாதம் தமிழகம் வரவிருக்கிறார் மோடி. எனவே, தமிழக கவர்னரிடம் தமிழக அரசியல்
நிலை குறித்து விவாதித்தார்' என கூறும் பா.ஜ., தலைவர்கள், 'இந்த சந்திப்பு
தி.மு.க.,விற்கு ஒரு அபாய மணி' என்கின்றனர்.