வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடும் 140 கோடி இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடும் 140 கோடி இந்தியர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : மே 26, 2025 08:12 PM
ADDED : மே 26, 2025 02:18 PM

ஆமதாபாத்: ''நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் நாடு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற, இந்தியர்கள் 140 கோடி பேரும் பாடுபடுகிறார்கள். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
உற்பத்தி துறை
உலக அளவில் உற்பத்தி துறையில் இந்தியா முன்னேறி வருகிறது. இன்று (மே 26) இதே தேதியில் 2014ம் ஆண்டு நான் முதல்முறையாக பிரதமராக பதவி ஏற்றேன். குஜராத் மக்கள் என்னை ஆசீர்வதித்தனர். பின்னர் கோடிக்கணக்கான இந்தியர்கள் என்னை ஆசீர்வதித்தனர். நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உள்நாட்டு பொருட்கள்
ஹோலி, தீபாவளி மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட்போன்கள், வாகனங்கள், பொம்மைகள், ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம். இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். குஜராத்தில் ரயில்வே நெட்வொர்க்கின் 100 சதவீத மின்மயமாக்கல் நிறைவடைந்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
நான் இங்கு வருவதற்கு முன்பு வதோதராவில் இருந்தேன், ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வந்திருந்தனர்.அவர்கள் இந்திய ஆயுதப் படைகளைக் கொண்டாட வந்திருந்தனர். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.
எவ்வளவு கடினம்
மோடியை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை பயங்கரவாதிகள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பஹல்காம் தாக்குதலின் படங்களைப் பார்த்து ரத்தம் கொதிக்கிறது. எனவே நம் நாட்டு மக்கள் விரும்பியதைச் செய்தேன். மக்கள் தான் என்னை பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.