ADDED : ஜூன் 10, 2024 06:59 AM
பாகூர் : விவசாய நிலத்தை சேதப்படுத்தி மணலை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் 70; இவர் கடலுார் வட்டத்தில் தாசில்தாரராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் குருவிநத்தம் தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள், இவரது விவசாய நிலத்தை சேதப்படுத்தி அங்கிருந்த மணலை, பைக் மூலமாக திருடிச் சென்றுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து, புதுச்சேரி கவர்னருக்கு இ.மெயில் மூலமாக புகார் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற தாசில்தார் நிலத்தில் நடைபெற்ற மணல் திருட்டு சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, மணல் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடததி வருகின்றனர்.