/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட கழிவு குவிப்பால் சுருங்கிய கூவம் நதி
/
கட்டட கழிவு குவிப்பால் சுருங்கிய கூவம் நதி
UPDATED : ஜூலை 16, 2024 06:26 AM
ADDED : ஜூலை 16, 2024 12:08 AM

மதுரவாயல் - துறைமுகம் இடையே இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியால், கூவம் ஆற்றில் 20 கி.மீ., துாரத்திற்கு கட்டட கழிவு கொட்டப்பட்டு உள்ளது. இதனால், பருவமழை காலத்தில், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2,624 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாம்பலம் கால்வாய், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலை பகுதியில், 1,139 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள், வரும் 2026ல் முடிவடைய உள்ளன.
சென்னையை பொறுத்தவரை, 2011 முதல் இதுவரை, மழைநீர் வடிகால், நீர்நிலை துார்வாருதல் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகளுக்காக, 12,820 கோடி ரூபாய் செலவிட்டு உள்ளது. ஆனால், வெள்ள பாதிப்பு பிரச்னை தீரவில்லை.
கடந்த 2023ல் வடகிழக்கு பருவமழையின் போது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் ஒரு வாரத்திற்கு மேல் தத்தளித்தன.
இந்நிலையில், மதுரவாயல் - துறைமுகம் இடையே 5,800 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கூவம் ஆறு மற்றும் மதுரவாயல் பகுதியில், 2011ம் ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் துாண்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இரண்டடுக்கு மேம்பாலத்திற்கு கூவம் ஆற்றில் துாண்கள் அமைக்க, இயந்திரங்களை கொண்டு செல்ல பாதை அமைக்க வேண்டியுள்ளது. அதனால், இந்த கட்டட கழிவுகள் கூவத்தில் கொட்டப்பட்டு, பாதை அமைக்கப்படுகிறது.
வளர்ச்சி பணிக்காக என்றாலும், கோயம்பேடு முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை உள்ள கூவம் ஆற்றில், கட்டட கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, கூவம் ஆற்றின் முகத்துவாரத்திற்கு மிக அருகில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், இருபுறமும் பெரும்பகுதி கட்டட கழிவுகளால் அடைக்கப்பட்டு, கூவம் ஆற்றில் நீர் செல்லக்கூடிய பகுதி சுருங்கி உள்ளது.
தற்போது சென்னையில், தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை போல், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு நடந்தால், கூவம் ஆற்றங்கரையோரம் உள்ள கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.
எனவே, நீர்வளத்துறை, மாநகராட்சி மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உள்ளிட்ட அரசு துறைகள், இப்பிரச்னையின் தீவிரம் உணர்ந்து, பெரும் வெள்ளம் ஏற்படும் முன், கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அத்துடன், சென்னையில் இரண்டாவது கட்டமாக, பெரும்பாலான இடங்களில் மெட்ரோ வழித்தட மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் நடக்கின்றன.
இத்திட்டத்தில் முக்கிய பகுதியான பெரம்பூர், திருமங்கலம், அயனாவரம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு வழியாக சுரங்கப்பணி நடந்து வருகிறது.
தற்போது, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளால், மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இப்பணிகள் முழுமை பெறாததால், மழைநீர் வடிகால்களில் நீர் செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -