/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் தனியார் சிற்றுந்து சேவை துவங்கியது: முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
/
சென்னையில் தனியார் சிற்றுந்து சேவை துவங்கியது: முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
சென்னையில் தனியார் சிற்றுந்து சேவை துவங்கியது: முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
சென்னையில் தனியார் சிற்றுந்து சேவை துவங்கியது: முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
UPDATED : ஜூன் 17, 2025 05:18 PM
ADDED : ஜூன் 17, 2025 12:24 AM

சென்னை சென்னையில் முதன்முறையாக, உட்புற பகுதிகளை நகருடன் இணைக்கும் வகையில், தனியார் சிற்றுந்து சேவை நேற்று துவங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 72 வழித்தடங்களில், முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் சேவை துவங்கியுள்ளது. மற்ற வழித்தடங்களில் படிப்படியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில், பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. மாநகர போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையால் சேவையில் பாதிப்பு தொடர்கிறது. இயக்கப்படும் பேருந்துகளும் நெரிசலுடன் செல்கின்றன.
குறிப்பாக, சென்னையின் உட்புற பகுதிகளில், போதிய அளவு பேருந்து சேவை இல்லாததால், பள்ளி நேரத்தில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பலதரப்பினர் பாதிக்கப்பட்டனர்.
முன்பைவிட பேருந்துகளின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், சென்னையில் தனியார் சிற்றுந்துகளை இயக்க முடிவானது. தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 72 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க, அரசு அனுமதி அளித்தது.
அந்த வகையில், சென்னை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்துார், பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 33 வழித்தடங்கள்; தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார், திருவான்மியூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 39 வழித்தடங்கள் என 72 வழித்தடங்களில், தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
துவக்கிவைப்பு
இந்நிலையில், தமிழகம் முழுதும் செயல்படுத்தப்படும் தனியார் சிற்றுந்து சேவையை, முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூரில் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள் சிற்றுந்து சேவையை துவக்கி வைத்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், முதற்கட்டமாக 11 சிற்றுந்துகளை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தென் சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை, புறநகரின் உட்புற பகுதிகளை நகருடன் இணைக்கும் வகையில், சிற்றுந்துகளுக்கான வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
சிற்றுந்து சென்றடையும் இடத்தில் இருந்து அடுத்த 1 கி.மீ., துாரத்திற்குள் பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, கோவில்கள், சந்தைகள் இருக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சென்னையில் முதல் முறையாக, தனியார் சிற்றுந்து சேவை நேற்று துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்கப்படுகின்றன. படிப்படியாக 72 வழித்தடங்களில், 200க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
சென்னையில், இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்போது, இணைப்பு வாகன வசதி தேவை அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இல்லை. தனியார் சிற்றுந்துகள் இயக்குவது வரவேற்கத்தக்கது. ஆனால் 11 சிற்றுந்துகளின் சேவை மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.தேவைக்கு ஏற்ப, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
![]() |
மற்ற மாவட்டங்கள்
சென்னையை போல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தனியார் சிற்றுந்து விரிவாக்க சேவை நேற்று துவங்கியது. செங்கல்பட்டின் 50 வழித்தடங்களில் 11 பகுதிகளுக்கும்; காஞ்சிபுரம் மாவட்டத்தின் 29 வழித்தடங்களில் நான்கு பகுதிகளுக்கும்; திருவள்ளூர் மாவட்டத்தில் 49 வழித்தடங்களில் ஐந்து பகுதிகளுக்கு மட்டும் சிற்றுந்துகள் சேவை துவங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2,857 வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. இதில், 2,010 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம் துவக்கப்பட்டு உள்ளது.
சென்னையை போல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தனியார் சிற்றுந்து விரிவாக்க சேவை நேற்று துவங்கியது. செங்கல்பட்டின் 50 வழித்தடங்களில் 11 பகுதிகளுக்கும்; காஞ்சிபுரம் மாவட்டத்தின் 29 வழித்தடங்களில் நான்கு பகுதிகளுக்கும்; திருவள்ளூர் மாவட்டத்தில் 49 வழித்தடங்களில் ஐந்து பகுதிகளுக்கு மட்டும் சிற்றுந்துகள் சேவை துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தம், 2,857 வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. இதில், 2,010 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கம் துவங்கப்பட்டு உள்ளது.