/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி இன்றுடன் நிறைவு
/
அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : ஜூலை 14, 2024 10:56 PM
கோவை கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகத்தில், நடைபெற்று வரும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று ஞாயிறு ஆனதால், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் திரளாக வந்திருந்து கண்காட்சியை பார்வையிட்டனர். விதவிதமான தராசுகள்
பணம் எண்ணுவதற்கு, நகைகள் மற்றும் விதைகள் எடை பார்ப்பதற்கு தனி இயந்திரம், கோழிக்கடைகளில் பயன்படுத்துவதற்கு, கால்நடைகளின் எடையை சரிபார்ப்பதற்கு என, தனித்தனியான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் உரிமையாளர்கள் வினியோகிப்பது மட்டுமல்லாமல், பழுது பார்ப்பது, குறித்த காலத்தில் அரசு முத்திரையிட ஏற்பாடு செய்வது என, அனைத்தும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இனி மண் வேண்டாம்
மாடித் தோட்டத்துக்கு, சற்று பெரியளவிலான செடிகள் வைக்கும் போது, அதிக மண் தேவைப்படும். அரங்கில் இதற்கென வைக்கப்பட்டிருந்த அரங்குகளில், மாடித் தோட்டத்துக்கு என, மண் போன்ற ஒரு கலவை தயாரித்து வழங்குகின்றனர். அவ்வப்போது, செடி மற்றும் மரங்களுக்கு ஏற்ப, ஒரு ஸ்பூன், இரண்டு ஸ்பூன் உரம் சேர்த்தால் போதும் என்கின்றனர்.
விவசாயிகளுக்கு உறுதி
செடிகளுக்கான உரத்துக்கு, தனியாக மண்புழு உரம் வைத்திருந்தாலும், பல கலவைகளாக, அதாவது, மண் புழு உரம், கோழி எரு, ஆட்டு எரு, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, கடல் பாசி உட்பட 14 வகையான பொருட்கள் அடங்கிய உரம் பாக்கெட்கள் உள்ளன. இதுபோன்ற உரம் தயாரிப்பாளர்கள் பலர், நிலத்துக்கு வந்து ஆய்வு செய்து, என்னமாதிரியான உரங்கள் இடலாம் என்று, ஆலோசனை சொல்லவும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
தென்னைக்கு என்ன செய்யலாம்
தென்னையை நோய் தாக்குதல், பராமரிக்க முடியாதது உட்பட பல்வேறு காரணங்களால், தென்னை விவசாயம் மேற்கொள்வதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன. இதை நீக்க, நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம் என, விவசாயிகளை அழைத்தது ஒரு அரங்கு. ஓய்வு பெற்ற வேளாண் பேராசிரியர் ஒருவரின் தலைமையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்தனர். இவர்களின் கட்டணமில்லா எண்: 1800 266 4646.