/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாசிப்பை நேசிக்க வேண்டும்; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
/
வாசிப்பை நேசிக்க வேண்டும்; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
வாசிப்பை நேசிக்க வேண்டும்; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
வாசிப்பை நேசிக்க வேண்டும்; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு
ADDED : அக் 14, 2025 09:29 PM
கோவில்பாளையம்; 'வாசிப்பை நேசிக்க வேண்டும்,' என, தமிழ்ச் சங்க விழாவில் அறிவுறுத்தப்பட்டது.
கவையன் புத்தூர் தமிழ் சங்கம் சார்பில், இலக்கிய நிகழ்ச்சி கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது. பள்ளி மாணவியர் வரவேற்பு நடனம் ஆடினர். சங்க பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்றார்.
ஆங்கில பேராசிரியர் வேலுசாமி பேசுகையில், நாடும், வீடும் நலமாக இருக்க, நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம், அமைதி, கருணை ஆகிய மூன்றும் நம்மிடம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். வாசிப்பை நேசிக்க வேண்டும், என்றார்.
கற்பகம் பல்கலை பேராசிரியர் சிவ செந்தில் பேசுகையில், மனிதன் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கிறான். வாய்ப்பைத் தேடிச் செல்வது புத்திசாலித்தனம். வாய்ப்பு நம்மை தேடி வந்தால் அதிர்ஷ்டம். வந்த வாய்ப்பை நழுவ விட்டால் ஏமாளி.
உலகில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. நம் நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில் உள்ளது, என்றார்.
பெரியபுராண நாயன்மார்கள் குறித்து பேராசிரியர் ராமலிங்கம் தலைமையில் பேச்சரங்கம் நடந்தது. புலவர்கள், நாயன்மார்கள் குறித்து பேசினர். சான்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
குறள் கூறியோர், நடனம் ஆடிய மாணவியர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.
கணித ஆசிரியை பானுமதி தொகுத்து வழங்கினார். 'படித்ததில் பிடித்தது' என்கிற தலைப்பிலும், நான் அறிந்த மகாத்மா என்னும் தலைப்பிலும் மாணவியர் பேசினர்.

