/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்
/
வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம்
ADDED : ஜூலை 13, 2024 12:54 AM
குள்ளஞ்சாவடி: வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண் பணிகளை மேம்படுத்த ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்துறை செய்திக்குறிப்பு:
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க, புதிய தொழில் நுட்பங்களை நடைமுறைப்படுத்த வேளாண் தோட்டக்கலை மற்றும், வேளாண் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி தாலுகாவில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் அல்லது, வேளாண் உள் கட்டமைப்பு நிதி திட்டம் ஆகியவற்றின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று, வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழில் துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
தகுதியான பட்டதாரிகள் வேளாண் துறையின் அக்ரிஸ்நெட் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பயன்பெற விரும்பும் பட்டதாரிகள், 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கணினி திறன் பெற்று இருக்க வேண்டும். அரசு மற்றும், தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள், உரிய ஆவணங்களுடன் குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது, கடலுார் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
தகுதியான பயனாளிகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவின் பரிந்துரைப்படி தேர்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.