/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காணும் பொங்கலுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பு
/
காணும் பொங்கலுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜன 17, 2024 08:40 AM
பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம்  காட்டுமன்னார்கோவில் என பல்வேறு பகுதிகளில் மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி கழுத்தில் மணி கட்டி, மாலை அணிவித்து அலங்காரம் செய்து பொங்கல் படையலிட்டு வழங்கினர்.
பின், மாடுகளை அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் பூட்டி ஊர்வலம் சென்றனர். இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி என 7 காவல் உட்கோட்டங்களில் எஸ்.பி., ராஜாராம் மேற்பார்வையில், 2,000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1,451 வழக்குகள்
புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வருவதை  தடுக்கும் பொருட்டு நிரந்தர சோதனை சாவடிகள் மட்டுமின்றி தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 14ம் தேதி முதல், நேற்று 16ம் தேதி வரை, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 195 வழக்குகள், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 12, தலைக்கவசம் அணியாதது 673, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றது 2, 'சீட்' பெல்ட் அணியாதது 15, அதிவேகமாக வாகனம் ஓட்டியது 42 மற்றும் இதர போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 512 வழக்கு என மொத்தம் 1, 451 வழக்குகள் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

