ADDED : ஜன 10, 2024 12:04 AM
கடலுார் : சிலம்பிமங்கலம் இடுகாட்டிற்கு மாற்று பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து கிராம மக்கள் சார்பில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் வீரமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:
விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில், சிதம்பரம் அருகே பெரியப்பட்டு - புதுச்சத்திரம் இடையே சிலம்பிமங்கலம் கிராமம் உள்ளது. சாலையின் இரு புறமும் உள்ள பொதுமக்கள் சுடுகாடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்து பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தாசில்தார் தலைமையில் கிராம மக்களிடம் இரு முறை பேச்சு வார்தை நடத்தப்பட்டன. இருப்பினும் சிலம்பிமங்கலம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படவில்லை.
அந்த பகுதியில் சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் பயன்படும் வகையில் சுடுகாட்டிற்கு செல்ல மாற்றுபாதை அமைத்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

