ADDED : செப் 02, 2025 01:28 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, குருசாமி நகரில் பராமரிப்பு இல்லாத பூங்காவை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 44வது வார்டு குருசாமி நகரில் 2016 - 17ல், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 43.91 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.
இப்பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதை, சிறுவர்களுக்கான சீசா, ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், இரவில் ஒளிரும் மின்விளக்கு, செயற்கை நீரூற்று, அழகிய புல் தரை, அமர்வதற்கான இருக்கை என வசதி பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டது.
குருசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிவாசிகள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா முழுதும் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.
செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான ஊஞ்சல், சீசா, சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பழுதுடைந்துள்ளன.
மேலும், பூங்காவில் செடிகளுக்கு இடையே பாம்பு, தேள், விஷ வண்டு உள்ளிட்டவை தஞ்சமடைந்துள்ளதால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, குருசாமி நகர் பூங்கா சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.