/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செல்லியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
/
செல்லியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED : ஜூன் 22, 2025 08:38 PM
செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடில் செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மன் கோவில் உள்ளது. இதில், செல்லியம்மன், மாரியம்மன் கோவில்களுக்கு, புதிதாக கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு, பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, கடந்த மாதம் 2ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 8:30 மணிக்கு கலச பூஜை நடந்தது. தொடர்ந்து செல்லியம்மன், மாரியம்மன், அரசு காத்தம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
காலை 10:30 மணிக்கு கலசாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு பாலாற்றாங்கரையில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8:00 மணிக்கு செல்லியம்மன் வீதியுலா நடந்தது.