/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கமிஷனரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்... 'கெரோ!; மேயரை எதிர்த்து மாநகராட்சியில் தர்ணா
/
கமிஷனரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்... 'கெரோ!; மேயரை எதிர்த்து மாநகராட்சியில் தர்ணா
கமிஷனரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்... 'கெரோ!; மேயரை எதிர்த்து மாநகராட்சியில் தர்ணா
கமிஷனரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்... 'கெரோ!; மேயரை எதிர்த்து மாநகராட்சியில் தர்ணா
ADDED : ஜூலை 22, 2024 11:45 PM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு ஆதரவாக கமிஷனர் செயல்படுவதை கண்டித்து, கவுன்சிலர்கள் அவரது அறையை முற்றுகையிட்டு, 'கெரோ' செய்தனர். தொடர்ந்து, மேயரை எதிர்த்து மாநகராட்சி வளாகத்தில் பந்தல் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, துணை மேயர் குமரகுருநாதன் உட்பட தி.மு.க., -- அ.தி.மு.க., என, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் கமிஷனர் செந்தில்முருகன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
வரும் 29ம் தேதி, மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் செந்தில்முருகனிடம், தாங்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கேட்க, தி.மு.க., -- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மதியம் 1:00 மணிஅளவில் சென்றுள்ளனர்.
அப்போது, கமிஷனருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கமிஷனரின் அறையை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர். மேயருக்கு ஆதரவாக கமிஷனர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
அதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்திலிருந்து கமிஷனர் செந்தில்முருகன் புறப்பட்டு சென்றார். துணை மேயர் குமரகுருநாதன், தி.மு.க., -- அ.தி.மு.க., - சுயேட்., கவுன்சிலர்கள், 20 பேர், மாநகராட்சி வளாகத்தில் பந்தல் போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி வளாகமே பரபரப்பாக காணப்பட்டதால், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கலெக்டர் கலைச்செல்வி, மாநகராட்சியில் நடக்கும் போராட்டம் மற்றும் கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்த, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோரை நேரில் அனுப்பினர்.
அவர்கள், மாநகராட்சி அலுவலகத்திற்கு மாலை சென்று, அலுவலகத்தில் இருந்த மாநகராட்சி பொறியாளர் கணேசனிடம் இதுகுறித்து பேசினர். அப்போது, கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு, நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம் உள்ளிட்டவை குறித்து, இருவரிடமும் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்திலிருந்து வெளியே வந்த கோட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகிய இருவரும், கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினர்.
உங்களின் போராட்ட விபரம், கமிஷனர் மீது கவுன்சிலர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு ஆகியவற்றை கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர்.
இதையடுத்து, கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தர்ணா போராட்டம் இரவிலும் தொடர்ந்தது.