ADDED : ஜூலை 03, 2025 03:35 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே மீனாட்சிபுரம் மந்தையில் உள்ள டீக்கடையில் சில மாதங்களாக சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடக்கிறது.
அப்பகுதியில் அமர்ந்து மது அருந்துவோர், காலி பாட்டில்களை சாலை ஓரங்களிலும், விவசாய நிலங்களிலும் போட்டுச் சென்று வருகின்றனர். பெண்கள், மாணவர்களுக்கு போதை நபர்களால் தொந்தரவு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் மது விற்பனையை நிறுத்தவில்லை.
இதைக்கண்டித்து நேற்று காலை 10:00 மணிக்கு மீனாட்சிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் திருமங்கலம் -சேடப்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான போலீசார் பேசி மதுவிற்கும் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.