/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.என். 59 : அலுவலர் ஒன்று... அலுவலகங்களோ மூன்று: வாகன பதிவு பணிகளில் தொடரும் சுணக்கம்
/
டி.என். 59 : அலுவலர் ஒன்று... அலுவலகங்களோ மூன்று: வாகன பதிவு பணிகளில் தொடரும் சுணக்கம்
டி.என். 59 : அலுவலர் ஒன்று... அலுவலகங்களோ மூன்று: வாகன பதிவு பணிகளில் தொடரும் சுணக்கம்
டி.என். 59 : அலுவலர் ஒன்று... அலுவலகங்களோ மூன்று: வாகன பதிவு பணிகளில் தொடரும் சுணக்கம்
UPDATED : ஜூன் 18, 2025 09:30 AM
ADDED : ஜூன் 18, 2025 04:20 AM

மதுரை: மதுரையில் டி.என்.59 பதிவெண் வழங்கும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.,) ஒரு வாகன ஆய்வாளரே 3 அலுவலகங்களை கவனிக்க வேண்டியிருப்பதால் பணிகளில் பின்னடைவு ஏற்படுகிறது.
நகரில் வடக்கு, தெற்கு, மத்தி என 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தலா ஒரு வாகன ஆய்வாளரே பணியில் உள்ளார். வடக்கு அலுவலகத்தில் அதிகளவாக தினமும் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு, தகுதிச்சான்று போன்றவற்றுக்கு வருகின்றன. இதுதவிர டிரைவிங் லைசென்ஸ், வாகன விபத்து தொடர்பாக என பல்வேறு பணிகளுக்காகவும் ஏராளமானோர் வருகின்றனர்.
இந்த அலுவலகத்தின் கீழ் மேலுார், வாடிப்பட்டி பகுதிகளில் யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இங்கும் தலா ஒரு வாகன ஆய்வாளர்கள் இருந்தனர். தற்போது வாடிப்பட்டி ஆய்வாளர் காரைக்குடிக்கும், மேலுார் ஆய்வாளர் தாராபுரத்திற்கும் மாற்றப்பட்டுவிட்டனர். இதனால் இந்த அலுவலகங்களையும் மெயின் அலுவலகத்தில் உள்ள ஆய்வாளரே கவனிக்கும் நிலை உள்ளது.
இவர் வாரம் ஒருநாள் மேலுார், மற்றொரு நாள் வாடிப்பட்டி அலுவலகங்களையும், மீதி 3 நாட்களில் வடக்கு அலுவலகத்திலும் பணியில் உள்ளார். வாகன பதிவு, டெஸ்ட் பணிகளை மட்டுமே கவனிக்க முடிகிறது. சாலைகளில் சோதனை நடத்த வழியில்லை. விபத்து வழக்குகளுக்காக நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டியுள்ளதால் 3 அலுவலகங்களிலும் பணிகள் தேங்குகின்றன.
ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு ஆட்களை நியமிக்க 7 ஆண்டுகளுக்கு முன் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிட்டனர். பின்பு நீதிமன்ற வழக்குகளால் பணிநியமனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இவ்வழக்கை விரைவுபடுத்தி மாநில அளவில் ஆய்வாளர்களை நியமனம் செய்தால் இச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.