/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆபத்தான நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி
/
ஆபத்தான நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி
ADDED : ஜூன் 19, 2024 11:01 AM
பனமரத்துப்பட்டி: ஆபத்தான நெடுஞ்சாலையில், அனுமதியின்றி குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலம் பாலாஜி நகரை சேர்ந்த ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபாகரன், 29. இவர், சேலம் கன்னங்குறிச்சியில், ஸ்கேட்டிங் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், 13 சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தார். அதை சிறுவர்களின் பெற்றோர், வீடியோ எடுத்து பகிர்ந்தனர். ஆபத்தான நெடுஞ்சாலையில் சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பயிற்சியாளர் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று மல்லுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு பயிற்சியாளர் பிரபாகரன், சிறுவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம், சேலம் புறநகர் டி.எஸ்.பி., அமலஆட்வின் பேசியதாவது: நெடுஞ்சாலை மிகவும் ஆபத்தானது. கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆபத்தான நெடுஞ்சாலையில், ஸ்கேட்டிங் பயிற்சி அளித்ததும், சிறுவர்களை அனுப்பி வைத்ததும் குற்றமே. அவர்களுடன், பெற்றோர்களாகிய நீங்கள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்று, ஸ்கேட்டிங் செய்வதை வீடியோ எடுத்து, டாட்டா காட்டி அனுப்பி வைக்கிறீங்க. மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றால் பெருமைதான். ஆனால், முதலில் பாதுகாப்புதான் முக்கியம். இனி இது போல் நடக்கக்கூடாது.
போலீசாரை அணுகினால், சர்வீஸ் சாலையில் பாதுகாப்புடன் பயிற்சிக்கு அனுமதி தருவர். ஆபத்தான நெடுஞ்சாலையில், அனுமதியின்றி ஸ்கேட்டிங் செய்ததால், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நான்கு பிரிவுகளில் பயிற்சியாளர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
இதையடுத்து, பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். அதன் பின், போலீசார் சொந்த ஜாமினில் அவரை விடுவித்தனர்.