ADDED : ஜன 17, 2024 01:04 AM
ஆண்டிபட்டி : மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நாட்டு மாடுகளுக்கு கிராமங்களில் பொங்கலிட்டு, கொழுக்கட்டை வழங்கி வணங்கினர்.
தைப்பொங்கலின் 2ம் நாளான நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஆண்டிப்பட்டி பகுதியின் பல்வேறு கிராமங்களில் கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்கி கொண்டாடினர். தேனி மாவட்டத்தில் சத்திரப்பட்டி, வயல்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, பந்துவார்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, சித்தார்பட்டி உள்பட பல கிராமங்களில் நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் நாட்டு மாடுகளை போற்றும் விதமாக நாட்டு மாடுகளின் தொழுவங்களை அலங்கரித்து மஞ்சளினால் சுவாமி கோலங்கள் இட்டனர். பொங்கல், ஆப்பிள், திராட்சை, வாழை உட்பட பல வகை பழங்கள் வைத்தும், வில்வ கூடைகளில் கொழுக்கட்டை வைத்தும் மாடுகளுக்கு மரியாதை செய்தனர்.
கன்றுக்குட்டிகள் நன்றாக உணவு சாப்பிடவும், வளர்ந்த மாடுகளை போல் மேய்ச்சல் நிலங்களில் சுற்றி பசுந்தீவனங்களை நன்றாக உணவாக உட்கொள்வதற்கும் தங்களின் சந்ததிகளை பெருக்கிடும் வகையில் கன்று குட்டிகளுக்கு மந்திரங்கள் முழங்கினர். நாட்டு மாடுகளுக்கு பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி தொழுவத்தினை திறந்து விட்டு ஒவ்வொரு மாடாக மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்தனர்.

