புகழ்பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவில் வாரிய தலைவராக 'மாஜி' ரவுடி நியமனம்
புகழ்பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவில் வாரிய தலைவராக 'மாஜி' ரவுடி நியமனம்
ADDED : மே 15, 2025 12:09 AM

தட்சிணகன்னடா: கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக போற்றப்படும், குக்கே சுப்ரமண்யா கோவிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி நியமிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தட்சிணகன்னடா மாவட்டத்தில் குக்கே சுப்ரமண்யர் கோவில் உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க புண்ணிய தலமாகும். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் இக்கோவிலுக்கு வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
கர்நாடகாவில் அதிக வருவாய் உள்ள கோவில்களின் பட்டியலில், குக்கே சுப்ரமண்யர் கோவில் முதல் இடத்தில் உள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலின், நிர்வாக வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடியை தேர்வு செய்துள்ளனர்.
இது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இவரை இப்பதவியில் நியமிக்கும்படி, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஷ் இஞ்சாடி முன்னாள் ரவுடி. சிறைக்கும் சென்று வந்தவர். போலி காசோலை கொடுத்து, பழங்கள், தேங்காய் விற்பனை 'டெண்டர்' எடுத்து, கோவில் நிர்வாகத்தை ஏமாற்றியதாக செய்த குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இதே வழக்கில் இவர் கைதானார்.
அது மட்டுமின்றி, மணல் மாபியா மற்றும் மரக்கடத்தலில், இவருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிப்பட்டவரை கோவில் நிர்வாக வாரிய தலைவராக நியமித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக தலைவராக, ஹரிஷ் இஞ்சாடியை நியமித்த விஷயத்தில், எனக்கு தொடர்பு இல்லை. அவரது பெயரை அப்பதவிக்கு, நான் சிபாரிசு செய்யவும் இல்லை. தேர்தல் மூலமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவரை நியமித்தது சரியல்ல. இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருடன் பேசுவேன்.
- தினேஷ் குண்டுராவ், அமைச்சர், காங்.,