/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனோபுரம் ஆற்று பாலத்தின் இணைப்பு சாலை படுமோசம்
/
மனோபுரம் ஆற்று பாலத்தின் இணைப்பு சாலை படுமோசம்
ADDED : ஜூன் 23, 2025 02:56 AM

பொன்னேரி:ஆற்று பாலத்தின் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்தும், இணைப்பு சாலை கரடு முரடாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றமான பயணம் மேற்கொள்கின்றனர்.
பொன்னேரி அடுத்த மனோபுரம் -- கம்மவார்பாளையம் கிராமங்களுக்கு இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளன. இணைப்பு சாலை முழுதும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக உள்ளது.
தடுப்புச்சுவர் உடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறுகின்றனர்.
மனோபுரம், கொளத்துமேடு, பெரியமனோபுரம், கம்மவார்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகளுக்கு, இந்த ஆற்றுப்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்நிலையில், சேதமடைந்த இணைப்பு சாலை பகுதி மற்றும் தடுப்புச்சுவர்கள் சீரமைக்கப்படாமல் இருப்பது கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.