/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜம்புக்கல் மலையை மீட்க விவசாயிகள் கோரிக்கை
/
ஜம்புக்கல் மலையை மீட்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 21, 2024 09:46 PM

உடுமலை,:திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ஆண்டியகவுண்டனுார், எலையமுத்துார் பகுதியில், 6,000 ஏக்கரில், பசுமையான ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது.
அரசுக்கு சொந்தமான இம்மலையில், சமதள பரப்பில், ஆடு, மாடு மேய்த்துக்கொள்ளவும், சிறிய அளவிலான விவசாயம் மேற்கொள்ளும் வகையில், 350 விவசாயிகளுக்கு, 'கண்டிசன் பட்டா' வழங்கப்பட்டது.
அதன்படி, 3 அடி ஆழத்திற்கு மேல் நிலத்தை தோண்டக்கூடாது, நீர் வழித்தடங்கள் பாதிக்கக்கூடாது, விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தனி நபர்கள் சிலர், விவசாயிகளின் பெயரில் போலி ஆவணங்கள் வாயிலாக நிலங்களை அபகரித்தனர். இப்போது, அரசுக்கு சொந்தமான அந்த மலையையே ஆக்கிரமித்துள்ளனர்.
இதை எதிர்த்து, விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில், விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், 'அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலையை மீட்க வேண்டும்; தற்போது, மழை பெய்து வருவதால், விவசாயம் செய்யவும், கால்நடைகளை மேய்க்கவும், வழித்தடத்தை தனியார் அடைத்து வைத்துள்ளதை அகற்ற வேண்டும். மலையை அழிக்கும் வகையில் நடந்து வரும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்' என, மனு அளித்தனர்.