விஷக்கடியால் 4,544 பேர் பலி: ஓராண்டில் 1 லட்சம் பேர் பாதிப்பு
விஷக்கடியால் 4,544 பேர் பலி: ஓராண்டில் 1 லட்சம் பேர் பாதிப்பு
ADDED : ஜூலை 13, 2024 03:43 AM

சென்னை: தமிழகத்தில் ஓராண்டில் விஷக்கடிக்கு, 1.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4,544 பேர் பலியானதாக தகவல் வெளியாகிஉள்ளது.
தமிழகத்தில் பாம்பு, தேள், நாய் உள்ளிட்டவற்றால் மக்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்கும் வகையில், துணை மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் விஷக்கடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உத்தரவு
இதற்கான நச்சு முறிவு மருந்துகளை, அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவில் கையிருப்பில் வைக்க, மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை, பாம்பு, தேள், நாய் உள்ளிட்டவற்றின் விஷக்கடியால், 1 லட்சத்து 3,253 பேர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 4,544 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
விஷக்கடி பாதிப்பு அதிகரித்தாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
சிகிச்சை
ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் விஷக்கடி எதிர்முறிவு சிகிச்சை மருந்து, நாய்க்கடி மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
இவை போன்ற முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதால், ரேபிஸ் நோயால் உயிரிழப்பது மற்றும் விஷக்கடியால் உயிரிழப்பது குறைந்து உள்ளது.
ஒரு சிலர், தாங்கள் விஷக்கடிக்கு உள்ளாகி இருக்கிறோம் என்பது தெரியாமல், இறுதிக்கட்டத்தில் மருத்துவமனைக்கு வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.