வெற்றியின் முகட்டில் நிற்கும் இண்டியா கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்
வெற்றியின் முகட்டில் நிற்கும் இண்டியா கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 01, 2024 11:14 AM

சென்னை: 'இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வின் பத்தாண்டு கால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ., வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணி திரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.
புதிய விடியல்
தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இண்டியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ., உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இண்டியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான துவக்கமாக அமையும். இது தொடர்பாக இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பா.ஜ., வீழட்டும்! இண்டியா கூட்டணி வெல்லட்டும்!. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.