'பச்சிளம் குழந்தையின் துளி ரத்தத்தில் மன வளர்ச்சி குறைபாடு அறியலாம்'
'பச்சிளம் குழந்தையின் துளி ரத்தத்தில் மன வளர்ச்சி குறைபாடு அறியலாம்'
ADDED : ஜூலை 23, 2024 03:21 AM

சென்னை : சென்னை போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மருத்துவ கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், குழந்தைகள் நலம் மற்றும் வளர்சிதை குறைபாடு நோய்கள் தலைப்பில், மரபணுசார் ஆலோசகர் டாக்டர் அனில் ஜலான் பேசியதாவது:
இந்தியாவில் ஆண்டுதோறும் 2,700 குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறக்கின்றன. வளர்சிதை நோய் குறைபாடுடன், 1,900க்கும் அதிகமாக குழந்தைகள் பிறக்கின்றன. இதை தடுக்க, குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில், குதிகாலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்து, அதை உறைய வைத்து ஆய்வு செய்வதன் வாயிலாக, பல வளர்சிதைவு மாற்ற குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.
இதில், 55 வகையான குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு குழந்தை பிறந்தால் கூட, மூன்று சொட்டு ரத்தம் குதிகாலிலிருந்து எடுத்து, பிரத்யேக காகிதத்தில் ஒட்டி காய வைத்து, ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்தால், மூளை வளர்ச்சி குறைபாடை கண்டறிந்து, அக்குழந்தையை குணமாக்க முடியும்.
இவ்வாறு கூறினார்.
ராமச்சந்திரா மருத்துவ மைய பச்சிளம் குழந்தைகள் நல டாக்டர் உமா மகேஸ்வரி பேசுகையில், ''கடந்த 2016 முதல், பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு சிதைவு நோய் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை, 14 பேருக்கு பரம்பரை வளர்சிதை மாற்றக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.