ADDED : ஜூலை 05, 2024 06:25 AM

திருப்பூர் : லோக்சபா தேர்தலின் போது ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொண்ட செலவினங்களுக்கு தொகை வழங்கப்படாததால் ஊராட்சி நிர்வாகங்கள் தவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 19ம் தேதி நடந்தது. இதில், ஓட்டுச் சாவடிகளாக அரசு பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்கள் வசதிக்காக உரிய ஏற்பாடுகள் செய்ய மாநில தேர்தல் கமிஷன் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியது.
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உரிய ஒன்றிய நிர்வாகங்கள், ஊராட்சி பகுதியில் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், ஊராட்சி பொது நிதியில் இதை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஊராட்சி பகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், ஷாமியானா பந்தல் அமைத்தல், உதவி மையம் அமைத்தல், குடிநீர், கழிப்பிடம், மின் இணைப்புகள், விளக்குகள் உள்ளிட்ட குறைந்த பட்ச வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
இதற்காக ஊராட்சி அமைப்புகள் செலவு செய்தன. தேர்தல் ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணிக்கை அனைத்தும் முடிந்து, மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைத்தும் விட்டது. ஆனால், ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் பணிக்கு செலவிட்ட தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் திணறி வரும் ஊராட்சி அமைப்புகள் மேலும் கூடுதல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.