ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவங்களில் 4 பேர் கைது; ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு
ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவங்களில் 4 பேர் கைது; ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு
UPDATED : மே 19, 2025 02:05 PM
ADDED : மே 19, 2025 12:36 PM

ஈரோடு: ஈரோடு மற்றும் பல்லடத்தில் இரு வேறு இடங்களில் நடந்த வயது முதிர்ந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 4 பேருக்கும் ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த முதிய தம்பதி ராமசாமி - பாக்கியம். இவர்கள், ஏப்., 28ல் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க, 12 தனிப்படைகள் மற்றும், 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
அருகில் உள்ள அறச்சலுார் என்ற ஊரை சேர்ந்த பழைய குற்றவாளி ஆச்சியப்பன், 48, என்பவரை போலீசார் விசாரித்தனர். மேலும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களான மாதேஸ்வரன், 53, ரமேஷ், 52, ஆகிய மூவரையும், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை நடத்தினர்.
மண்வெட்டியின் மரப்பிடியால் ராமசாமி - பாக்கியம் தம்பதியை தாக்கி கொலை செய்துள்ள இவர்கள், சிறு கத்திகளால் கை, காதுகளை வெட்டி நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் 4வது நபராக கைது செய்யப்பட்டார். தற்போது வழக்கில், ஞானசேகரன், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். 4 பேருக்கும் ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஜி., பேட்டி
இது தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார் கூறியதாவது:
* ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் நடந்த கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இரு சக்கர வாகனங்களையும், நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் மொபைல்போனையும் கைப்பற்றியுள்ளோம்.
* கைது செய்யப்பட்ட ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகிய 3பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
* நகையை உருக்கிக் கொடுத்த ஞானசேகரனையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை பாராட்டு
இது குறித்து முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக போலீசாருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பா.ஜ.,
சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக போலீசார், அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.