நெல்லைக்கு புதிய மேயர் தேர்வு: கோவையில் சீட் கிடைக்காத பெண் கவுன்சிலர் கண்ணீர்
நெல்லைக்கு புதிய மேயர் தேர்வு: கோவையில் சீட் கிடைக்காத பெண் கவுன்சிலர் கண்ணீர்
UPDATED : ஆக 05, 2024 01:41 PM
ADDED : ஆக 05, 2024 10:44 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வெற்றி
நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று ( ஆக.,05) நடந்தது. மேயர் வேட்பாளராக கிட்டுவை தி.மு.க., அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் என்ற கவுன்சிலர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 30 ஓட்டுகள் பெற்று கிட்டு வெற்றி பெற்றார். பவுல்ராஜ்க்கு 23 ஓட்டுகள் கிடைத்தது.
ஓட்டளிக்க அனுமதி மறுப்பு
முன்னாள் மேயர் சரவணன், மாநகராட்சி அரங்கிற்கு தாமதமாக வந்தார். இதனையடுத்து அவருக்கு ஓட்டுப்போட அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
கோவை மேயர் வேட்பாளர்
கோவை மாநகராட்சி மேயர் பதவியை, தி.மு.க.,வை சேர்ந்த, 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ராஜினாமா செய்ததால், அதற்கான மறைமுகத் தேர்தல், 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை)காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
மேயர் பதவியை கைப்பற்ற, பெண் கவுன்சிலர்களிடையே பலத்த போட்டி இருக்கிறது. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். சில கவுன்சிலர்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை மூலமாக தலைமைக்கு அறிக்கை பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், 29வது வார்டு திமு.க., கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். கணபதி பகுதியை சேர்ந்த இவர், முதல்முறை கவுன்சிலர் ஆவார். கோவை எம்.பி., ராஜ்குமாரின் ஆதரவாளர் ஆவார்.
கண்ணீர்
தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என கனவில் இருந்த மீனாலோகு என்ற கவுன்சிலர் தனக்கு மேயர் வாய்ப்பு கிட்டவில்லை என நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.