பச்சை பயறு கொள்முதலை அதிகரிக்க அரசிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
பச்சை பயறு கொள்முதலை அதிகரிக்க அரசிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 07:09 AM

சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், திண்டுக்கல், திருவள்ளூர், வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பச்சை பயறு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
'நாபெட்' எனப்படும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்படுகிறது. 1 குவின்டால் எனப்படும் 100 கிலோ பச்சை பயறுக்கு, 8,682 ரூபாய் கொள்முதல் விலையாக தரப்படுகிறது.
வெளிச்சந்தையில் விற்றால், 6,000 முதல் 6,500 ரூபாய் வரை தான் கிடைக்கும். இதனால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக, அரசிடம் பச்சை பயறு விற்பனை செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால், ஒவ்வொரு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மட்டுமே பச்சை பயறு கொள்முதல் நடக்கிறது. இதனால், அரசிடம் பச்சை பயறு வழங்க முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயி செந்தில்வேலன் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய மூன்று ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 325 டன் மட்டுமே பச்சை பயறு கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு நீர் பற்றாக்குறை இல்லாததால், இரண்டு மடங்கு சாகுபடி அதிகரித்துள்ளது. அரசு இதை கொள்முதல் செய்யாவிட்டால், தனியாரிடம் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மற்ற மாவட்டங்களிலும் இதேநிலை தொடர்கிறது.
எனவே, தமிழகத்தில் கூடுதல் பச்சை பயறு கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

