வேலுமணிக்கு வந்த கடிதம் கசிந்தது எப்படி: கேள்வி எழுப்பும் அ.தி.மு.க.,
வேலுமணிக்கு வந்த கடிதம் கசிந்தது எப்படி: கேள்வி எழுப்பும் அ.தி.மு.க.,
UPDATED : மே 27, 2025 04:47 AM
ADDED : மே 27, 2025 04:45 AM

கோவை : 'முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில், அத்தகவல் பொதுவெளியில் கசிந்தது எப்படி என விசாரிக்க வேண்டும்.
'கடிதம் அனுப்பியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு, சில நாட்களுக்கு முன் கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதுதொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சில நாட்களுக்கு முன் புகார் கொடுத்தனர்.
புகார் கொடுத்த சில மணி நேரத்திலேயே, அத்தகவல் பொதுவெளியில் கசிந்தது. இது, அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்தது.
இச்சூழலில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அருண்குமார், அம்மன் அர்ஜுனன், ஜெயராமன் உள்ளிட்டோர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரை நேற்று சந்தித்தனர்.
அப்போது, 'வேலுமணிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவர்களை, விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
'புகார் அளித்த ஒரு மணி நேரத்தில், பொதுவெளியில் தகவல் பரவியது குறித்தும் விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.