''காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் விடாமுயற்சி'': மீண்டும் பாராட்டிய செல்லூர் ராஜூ
''காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் விடாமுயற்சி'': மீண்டும் பாராட்டிய செல்லூர் ராஜூ
ADDED : ஜூன் 19, 2024 11:08 AM

மதுரை: ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார் எனவும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுலின் வீடியோவை பகிர்ந்து, ''நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்'' எனப் பதிவிட்டிருந்தார். பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக கூட்டணி அமைத்திருக்கும் அதிமுக, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி.,யை பாராட்டியது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. ''பாராட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எளிமையாக யார் இருந்தாலும் நான் பாராட்டுவேன்'' என செல்லூர் ராஜூ பதிலளித்தார். பின்னர் அது சர்ச்சையான நிலையில் அப்பதிவை நீக்கினார்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 19) பிறந்தநாள் கொண்டாடும் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளுடன், அவரை பாராட்டியும் பேசியுள்ளார் செல்லூர் ராஜூ. அவர் கூறுகையில், ''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. ராகுல் விடாமுயற்சியால் காங்கிரசை கட்டிக்காக்க முயற்சிக்கிறார். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்றார்.
சில நாட்களுக்கு முன்னதாக தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, 'எவ்வளவு காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? பிறரை சார்ந்து இருக்க போகிறோமா, அல்லது சுயமாக இருக்க போகிறோமா?' எனப்பேசியதால், விரைவில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுலை தொடர்ந்து செல்லூர் ராஜூ பாராட்டிவருவது, முக்கியமாக பார்க்கப்படுகிறது.