ரயிலில் 'டிக்கெட்' இல்லாமல் பயணிப்போரை பிடிக்க சிறப்பு குழு
ரயிலில் 'டிக்கெட்' இல்லாமல் பயணிப்போரை பிடிக்க சிறப்பு குழு
ADDED : செப் 26, 2025 10:18 PM
சென்னை:தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதும். எனவே, விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.
ஆனால், பயணியர் சிலர் டிக்கெட் எடுக்காமல் அல்லது உரிய டிக்கெட் இல்லாமல், முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர். இது, முன்பதிவு செய்து பயணிப்போருக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன.
இதற்கு தீர்வு காண, சிறப்பு சோதனைகள் நடத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் இருப்பர். முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கு, 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

