40க்கு 40 வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
40க்கு 40 வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
ADDED : ஜூன் 12, 2024 02:01 PM

சென்னை: ''மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது 40க்கு 40 என்ற வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். இந்த வெற்றிதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு, ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் 40க்கு 40ஐ நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது 40க்கு 40 என்ற வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல்.
அடுத்தடுத்த நகர்வுகள்
பார்லிமென்ட் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம். பார்லிமென்ட் ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இண்டியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.
200 பிளஸ் தொகுதிகள்
தமிழகத்தில் நாம் பெற்றுள்ள வெற்றி, இண்டியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. நாற்பதுக்கு நாற்பது என்று லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். இவ்வாறு திமுக தொண்டர்களுக்கு எழுதிய அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.