கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தில் மத்திய அரசு அகழாய்வு புறக்கணிப்பா?
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தில் மத்திய அரசு அகழாய்வு புறக்கணிப்பா?
ADDED : மே 24, 2025 04:14 AM

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்கரை ஏக்கரில், 67,363 சதுரடியில், 17.80 கோடி ரூபாயில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
இதில், தமிழக தொல்லியல் துறை நடத்திய நான்கு, ஐந்து, ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், சுடுமண் பானை, உலைகலன், சரிந்த நிலையில் உள்ள கூரை ஓடுகள், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட சுடுமண் பானை ஆகியவற்றை மட்டுமே காட்சிப்படுத்தும் பணி நடக்கிறது.
மத்திய தொல்லியல் துறை, 2015ல் நடத்திய அகழாய்வில், மிக நீண்ட செங்கல் கட்டுமான தரை தளத்தை கண்டறிந்தனர்.
தண்ணீர் உள்ளே வரவும், கழிவு நீர் வெளியே செல்லவும் குழாய் போன்ற அமைப்புடன் கொண்ட அந்த கட்டுமானத்தை, வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் ஆய்வு செய்தனர்.
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான செங்கல் கட்டுமானம் என, வரலாற்று ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில், திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியில், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்த முதல் மூன்று கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் இடம் பெறவில்லை.
கீழடி அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தின் மினியேச்சர் சிற்பம் பார்வையாளர்களை கவர்ந்த நிலையில், திறந்த வெளி அருங்காட்சியகத்தில் அது இடம் பெறாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு, 10 கட்ட அகழாய்வு நடந்தது. அந்த இடங்கள் அனைத்தும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நடவடிக்கை வேதனையை ஏற்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.