இந்தியா மீது நம்பிக்கை உள்ளது அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு
இந்தியா மீது நம்பிக்கை உள்ளது அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு
ADDED : ஜூலை 11, 2024 02:36 AM

வாஷிங்டன் : 'ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும், இந்தியா எங்களுடைய சிறந்த நட்பு நாடு தான். அதன் மீது நம்பிக்கை உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வு ஏற்பட இந்தியாவின் பங்கு முக்கியமாக இருக்கும்' என, அமெரிக்கா கூறிஉள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
மேலும், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது.
ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்காத நிலையில், உக்ரைனில் அமைதி திரும்புவதை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நட்பு பாராட்டினார். போரால் எந்தத் தீர்வும் காண முடியாது; பேச்சின் வாயிலாக அமைதி ஏற்படுத்த முடியும் என, மோடி வலியுறுத்தினார்.
இது குறித்து, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பேட் ரைடர் கூறியுள்ளதாவது:
இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக நட்பு உள்ளது. அமெரிக்காவின் பார்வையின்படி, இந்தியா நமக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு. ரஷ்யாவுடன் அவர்கள் பேசினாலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியையும் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது உக்ரைனில் அமைதி திரும்ப தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார். உக்ரைனில் அமைதி திரும்புவது குறித்து ரஷ்யாவிலும், மோடி பேசியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
''இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு தொடர்பான நம் கவலைகளை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளோம். நம் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை,'' என, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளார்.