பிரிட்டன் தேர்தலில் வீசியது ஸ்டாமர் புயல்!: ரிஷி சுனக் கட்சி தோல்வி
பிரிட்டன் தேர்தலில் வீசியது ஸ்டாமர் புயல்!: ரிஷி சுனக் கட்சி தோல்வி
UPDATED : ஜூலை 06, 2024 11:36 AM
ADDED : ஜூலை 05, 2024 07:00 AM

லண்டன்: நடந்து முடிந்த பிரிட்டன் பொது தேர்தலில், தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் எனப்படும், பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்த தொழிலாளர் கட்சி தலைவர் கேர் ஸ்டாமர், அந்நாட்டின் பிரதமராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டுக்கான பொது தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. இரவு 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பழமைவாத கட்சியின் ரிஷி சுனக், 44, தொழிலாளர் கட்சியின் கேர் ஸ்டாமர், 61, பிரதமர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.
ராஜினாமா
தொழிலாளர் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்தது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை. தொழிலாளர் கட்சி 412 இடங்களிலும், பழமைவாத கட்சி 121 இடங்களிலும் வெற்றி பெற்றன. வடக்கு பிரிட்டனின் ரிச்மண்ட் மற்றும் நார்த்தலர்டன் தொகுதியில் போட்டியிட்ட ரிஷி சுனக் 23,059 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், அவரது பழமைவாத கட்சி வரலாறு காணாத தோல்வி அடைந்தது. அவரது கட்சியை சேர்ந்த 250 எம்.பி.,க்கள் தோல்வியை தழுவினர்.
முடிவுகள் வெளியான பின், மனைவி அக் ஷதா மூர்த்தியுடன் சென்று, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார் ரிஷி சுனக். அதன் பின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரிஷி சுனக் பேசுகையில், ''வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சிக்கும், கேர் ஸ்டாமருக்கும் வாழ்த்துகள். அவரை தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். ''ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது.
நாட்டின் எதிர்காலம் சார்ந்து நம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். இந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்,'' என்றார். பேச்சின் போது அவர் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார்.தொழிலாளர் கட்சியின் கேர் ஸ்டாமர், தன் மனைவி விக்டோரியா ஸ்டாமருடன் சென்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அதன் பின், பிரிட்டன் பிரதமராக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
அப்போது ஆதரவாளர்கள் முன்னிலையில் ஸ்டாமர் பேசியதாவது: இந்த வெற்றியின் வாயிலாக, 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி புதிய எதிர்காலத்தை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுஉள்ளது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியது நாம் தான். இதற்காக நீங்கள் உழைத்தீர்கள், போராடினீர்கள், ஓட்டளித்தீர்கள். இப்போது மாற்றம் நிகழ்ந்துவிட்டது. நாட்டை மாற்றிவிட்டீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு நன்றி. கட்சியை மறுசீரமைக்க ஐந்து ஆண்டுகள் நாம் பாடுபட்டுள்ளோம்.
புதிய அத்தியாயம்
இந்த வெற்றியை நாம் கொண்டாட வேண்டிய நேரமிது. அதே நேரத்தில் நம் முன் சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டை புதுப்பிக்கும் பணி நம் முன் உள்ளது. பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம். நாட்டின் மீதிருந்த ஒரு சுமை நீங்கிவிட்டது. ஆம், இறுதியாக அந்த சுமை நீக்கப்பட்டுவிட்டது.
இந்த பெரிய தேசத்தின் புதிய விடியல் தற்போது தோன்றி இருக்கிறது. இனி நாம் நம்பிக்கையின் ஒளியுடன் நடக்கலாம். நாட்டு மக்கள் நமக்கு ஆணை பிறப்பித்துள்ளனர். இந்த ஆணை, ஒரு பெரிய பொறுப்பை நமக்கு அளித்துள்ளது. இன்று முதல் புதிய அத்தியாயத்தை துவங்குவோம். மாற்றத்திற்கான வேலையைத் துவங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.