ADDED : ஜூன் 19, 2025 11:21 PM

மைசூரில் நேற்று முன்தினம், மஹாராஜா கப் தேசிய அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. புனே பயில்வான் வெற்றி பெற்று, 40,000 ரூபாய் பரிசை தட்டி சென்றார்.
மைசூரு நகரின், தொட்ட ஏரி மைதானத்தில், பிரக்ருதி பவண்டேஷன் சார்பில், மஹாராஜா யதுவீர் கப் தேசிய அளவிலான மல்யுத்த போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.
இப்போட்டிகளில் சாம்ராஜ்நகர், பெலகாவி, மைசூரு, ராய்ச்சூர், ஹாசன், சிக்கமகளூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பயில்வான்கள் பங்கேற்றனர். 47 ஜோடி பயில்வான்கள், களத்தில் இறங்கி திறமையை காண்பித்தனர்.
சுற்றிலும் கூடியிருந்த பார்வையாளர்கள், கை தட்டியும், விசில் அடித்தும், ஆரவாரம் செய்தும் மல்யுத்த வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
முதலில் ஹொசஹள்ளியின் பயில்வான் சூரஜ், ரம்மனஹள்ளியின் பயில்வான் ராகவேந்திரா இடையே 10 நிமிடங்கள் மல்யுத்தம் நடந்தது.
ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தனர். யாரும் வெற்றி பெறாமல் ட்ராவில் முடிந்தது.
மகளிர் பிரிவில் முதோலின் வித்யாஸ்ரீ, கனகபுராவின் ஸ்ரீரக்ஷா இடையே, எட்டு நிமிடங்கள நடந்த மல்யுத்தமும் சம பலத்தில் முடிந்தது.
மைசூரு நகர், நஜர்பாத்தின் பிரேமா, பன்னுாரின் வருணா இடையே நடந்த யுத்தமும் சம பலத்தில் முடிந்தது.
ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பிரிவு மல்யுத்த போட்டியில், பன்னுாரின் பயில்வான் நிகில் கவுடா, மைசூரின் அபூபக்கர் இடையே நடந்த போட்டியில் நிகில் கவுடா வெற்றி பெற்றார்.
பெலகாவியின் பயில்வான் சஞ்சு, மஹாராஷ்டிரா புனேவின் பயில்வான் விஷால் சேகலே இடையே, 30 நிமிடங்கள் மல்யுத்தம் நடந்தது.
இதில் விஷால் வெற்றி பெற்று, மஹாராஜா யதுவீர் உடையார் கோப்பையை வென்றார். முதல் பரிசான 40,000 ரூபாயை தட்டி சென்றார்
- நமது நிருபர் -.