PUBLISHED ON : ஜூன் 29, 2025

ஐம்பது வயதிற்கு மேல், 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்ற பின், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்பின் அடர்த்தி குறைந்து விடும்.
இதனால், இந்த வயதில் கால்சியம் நிறைந்த பச்சை காய்கறிகள், முட்டை, பால், பால் பொருட்கள், சோயா, நட்ஸ், மீன் என்று தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு கால்சியம் சாப்பிடாவிட்டால், எலும்பின் அடர்த்தி குறைந்து, இறுகி, டீக்கடையில் விற்கும் பொறை, ரஸ்க் போன்று எளிதாக உடைந்து விடும்.
உடைந்த எலும்பின் உட்பகுதி, பொறையின் உள்ளே இருப்பதை போன்று மெல்லிய ஓட்டைகளுடன் இருக்கும்.
கால்சியம் குறைபாடு இருப்பதால் தான், 50 வயதிற்கு மேல் லேசாக தடுக்கி விழுந்தாலும் எலும்பு உடைகிறது. இடுப்பெலும்பில் பிரச்னை ஏற்பட்டு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
எலும்பின் திடத்தன்மை குறைபாட்டை, இயல்பாக இருக்கக்கூடிய எலும்பு, 'ஆஸ்டியோபீனியா' எனப்படும் எலும்பு மெலிதல் மற்றும் 'ஆஸ்டியோபோரோசிஸ்' எனப்படும் எலும்பு மிருதுவாகி பொறை போலாகி, எளிதில் உடைந்து விடும் தன்மை என்று இரண்டு நிலைகளாக பார்க்கலாம்.
இந்தப் பிரச்னைக்கு, மகப்பேறு, நாளமில்லா சுரப்பிகள், எலும்பியல் டாக்டர்கள் என்று மூன்று பிரிவினரும் சிகிச்சை தருகின்றனர்.
எலும்பின் அடர்த்தியை பரிசோதிக்க தற்போது பல முறைகள் உள்ளன. 40 வயதிற்கு மேல் டாக்டரின் ஆலோசனைப்படி இந்த பரிசோதனை செய்து, உணவு முறையில் தேவையான மாற்றத்தைச் செய்தால், பிரச்னை வராமல் தடுக்கலாம்.
டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி,
மூட்டு முடக்குவாத சிறப்பு மருத்துவர்,
மீனாட்சி மருத்துவமனை, சென்னை044 - 4293 8938drvk56@gmail.com