பிளாஷ்பேக்: ஒரே வெள்ளிக்கிழமையில் கோடீஸ்வரரான தயாரிப்பாளர்
'வெள்ளிக்கிழமை டைரக்டர்' என பெயர் எடுத்தவர் ராம நாராயணன் காரணம் ஒரு காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படம் வெளிவரும் என்பார்கள். சிறிய நடிகர்களை வைத்து, சிறிய பட்ஜெட்டில் ஒரு மாத்திற்கு ஒரு படத்தை முடித்து வெளியிடுகிறவர் அவர். அதனால்தான் அவரால் 100 படங்களுக்கு மேல் இயக்க முடிந்தது.
வெள்ளிக்கிழமை இயக்குனரை கோடீஸ்வர இயக்குநராக்கியது 'ஆடிவெள்ளி' என்ற படம். இன்றைக்கு சிறு பட்ஜெட்டில் தயாராகி வசூலை குவிக்கும் படங்களுக்கு 'ஆடிவெள்ளி' முன்னோடி. அன்றைய நிலவரப்படி சுமார் 50 லட்சத்தில் தயாரான இந்த படம் 5 கோடி வரை வசூலித்ததாக சொல்வார்கள். எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்றது இந்த படத்திற்குத்தான். அதோடு தியேட்டரில் அருள் வந்து ஆடியதும் இந்த படத்திற்கு பிறகுதான். சீதா, அருணா, நிழல்கள் ரவி, சந்திரசேகர், ஒய்.விஜயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
குட்டி யானை உடன் சீதா வருவதும், பாம்பு ஆக்ஷனில் இறங்குவதும், கிளைமேக்ஸில் கம்ப்யூட்டரைக் கொண்டு அமானுஷ்யத்தை அடக்க முயற்சிப்பதுமாகப் பல காட்சிகள் ரசிகர்களை வசீகரித்தன. குறிப்பாக பெண்களை. சங்கர் - கணேஷ் இசையில் 'வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றாண்டா', 'சொன்ன பேச்சைக் கேட்கணும்', 'வண்ண விழியழகி' பாடல்கள் ஹிட்டானது 'ஆயி மகமாயி' பாடல் தீவிர பக்தர்களை பரவசப்படுத்தியது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தைப்பூசம், ஆடி விரதம், சிவராத்திரி 'ராஜகாளியம்மன்க', 'பாளையத்து அம்மன்' என பல வெற்றிப் படங்களை இயக்கினார். ராம நாராயணனின் பட்டப் பெயரான 'வெள்ளிக்கிழமை ராமசாமி' என்பதுதான் படத்தில் நடித்த யானையின் பெயரும்.