11 வருட இடைவெளிக்குப் பின் ரோஜா
தமிழ் சினிமாவில் 1992ல் வெளியான 'செம்பருத்தி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரோஜா. அறிமுகப்படமே வெற்றிப் படமாக அமைந்ததால் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். எட்டே வருடங்களில் 100 படங்களைக் கடந்து சாதனை புரிந்தார். 2000ம் ஆண்டில் வெளிவந்த 'பொட்டு அம்மன்' அவரது 100வது படம். 100 படங்களில் நடித்ததற்காக அந்தக் காலத்தில் அவருக்கு விழாவையும் நடத்தினார்கள்.
2002ல் இயக்குனர் ஆர்கே செல்வமணியைத் திருமணம் செய்து கொண்ட பின்பும் கூட நடித்து வந்தார். இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்க இடையூறாக இருந்தது அவரது அரசியல் பயணம்தான். 1998ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2008ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2011ல் அக்கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தற்போது வரை இருக்கிறார்.
2014 மற்றும் 2019ல் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2024ல் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்பு, மீண்டும் சினிமா பக்கமும், டிவி பக்கமும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு தமிழில் டிவி ஷோக்கு மீண்டும் வந்தார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருக்கிறார்.
தமிழில் கடைசியாக 2015ல் வெளிவந்த 'என் வழி தனி வழி' படத்தில் நடித்திருந்தார். சுமார் 11 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அன்பே டயானா' படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தை அடுத்து அவர் முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள 'லெனின் பாண்டியன்' படம் வெளிவர உள்ளது.