உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / "வேண்டுமென்றே ஸ்ரீதேவியுடன் என்னை ஒரே அறையில் தள்ளிப் பூட்டினார்கள்" : ஜெயபிரதா வெளியிட்ட தகவல்

"வேண்டுமென்றே ஸ்ரீதேவியுடன் என்னை ஒரே அறையில் தள்ளிப் பூட்டினார்கள்" : ஜெயபிரதா வெளியிட்ட தகவல்

பாலிவுட்டில் 90-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் ஜெயபிரதா மற்றும் ஸ்ரீதேவி. இருவரும் பல படங்களில் அன்யோன்யமாக நடித்திருந்தாலும் கூட, போட்டி நடிகைகளாக இருந்ததால், தாங்கள் இருவரும் எப்போதும் பேசிக் கொண்டதே இல்லை என்கிற ஒரு ஆச்சரியமான புதிய தகவலை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் நடிகை ஜெயபிரதா.

இது குறித்து அவர் கூறும்போது, திரைப்படங்களில் நாங்கள் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறோம், சகோதரிகளாகக் கூட நடித்திருக்கிறோம். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டோம்; ஒருவரை ஒருவர் ஏறிட்டுக்கூட பார்க்க மாட்டோம். எங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது. ஒருவேளை யாராவது எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினால், அப்போதைக்கு ஒரு ஹலோ சொல்லிக் கொண்டு ஒதுங்கி விடுவோம்.

இதை கவனித்த மூத்த நடிகர்கள் ஜிதேந்திரா மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோர் ஒரு முறை படப்பிடிப்புத் தளத்தில் எங்கள் இருவரையும் ஒரே அறைக்குள் தள்ளிப் பூட்டினார்கள். அப்படியாவது நாங்கள் இருவரும் பேசிக் கொள்ள மாட்டோமா என்று அவர்கள் இதை செய்தார்கள். ஆனால், அவர்கள் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. அந்த அறைக்குள் நாங்கள் ஒரு மணி நேரம் தனியாக இருந்தும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

2018-ல் ஸ்ரீதேவி காலமானபோது இது குறித்து பெரிதும் வருந்திய ஜெயபிரதா, அவருடன் இவ்வளவு ஆண்டுகள் பணியாற்றியும் நீண்டகால நட்பை உருவாக்கிக் கொள்ள முடியாமல் போனது என் வாழ்நாளில் மிகப்பெரிய வருத்தம் என்றும், ஸ்ரீதேவி எப்போதாவது தன் செல்போன் நம்பரை கேட்டுக் கொண்டிருந்தால் கூட ஒருவருக்கொருவர் பேசியிருக்கலாமே என்று தான் விரும்பியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஜெயபிரதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !